Skip to main content

சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்! 

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

Farmers road block in front of the Collector's Office!

 

கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதேசமயம் புதிதாக 30- க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 

 

அதன்படி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், பூதாமூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அறிவித்ததால் பூதாமூர், ஏனாதிமேடு, பூந்தோட்டம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை குவியல் குவியலாகக் குவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கடந்த 30 நாட்களுக்கு மேலாக, காத்துக்கிடக்கும் விவசாயிகளின் நெல்மணிகள் மழையால் நனைந்து, சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மறுமுளைப்பு ஏற்பட்டுவிட்டதால், நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் திறக்கக் கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு பாழாவதால் ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

 

Farmers road block in front of the Collector's Office!

 

விருத்தாசலம்- கடலூர் பிரதான சாலையில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதால் சாலை மறியலை கைவிட்டு, தங்களது கோரிக்கைகளை சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக எழுதி கொடுத்தனர். மேலும் பூதாமூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.  
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.