Skip to main content

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு..200க்கும் மேற்பட்டோர் கைது!!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

தமிழ்நாட்டில் பவர்கிரீட் என்ற நிறுவனம்13 மாவட்டங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்க கூடாது என பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

farmers protest in erode



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் 13 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி பெருந்துறை துணை போலீஸ் சூப்பரிண்டன்ட் ராஜாகுமார் தலைமையில் அறச்சலூர், கொடுமுடி, மலையம்பாளையம், பங்களாபுதூர், கடத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதியம் 12 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து பஸ் நிலையம் முன்பு ரோட்டில் நின்று கொண்டு விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சாலை மறியல் செய்ய ரோட்டில் அமர்ந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், ஏ.ஐ.டி.யு.சியின் மாநில பொது செயலாளர் எஸ்.சின்னுசாமி மற்றும் சா.மெய்யப்பன், செல்வம் (தி.மு.க), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  13 பெண்கள் உட்பட 74 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
 

farmers protest in erode



அதே போல் நேற்று காலை பவானியில் அந்தியூர் பிரிவில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது ஒருங்கிணைப்பாளர் கே.எம் முனுசாமி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, கொ.ம.தே.க கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பவானி அந்தியூர் பிரிவில் 86 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவானி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மொடக்குறிச்சி பகுதியிலும் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வடிவேலு மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் "பறிக்காதே பறிக்காதே நில உரிமையை பறிக்காதே" என்று கோஷமிட்டனர். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் அவர்களை கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.