Skip to main content

5 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Extension of time for electricity bill payment in 5 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இதனையடுத்து, பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த ஏற்கனவே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகிய 5 அமைச்சர்கள் நியமித்திருந்த நிலையில், கூடுதலாக மேலும் 4 அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகிய 4 அமைச்சர்களை முதலமைச்சர் நியமித்துள்ளார். மேலும், 4 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் 4 பேரும் விரைந்து சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்துவர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கனமழை எதிரொலியால் 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய மின்கட்டணம் செலுத்த மின்சாரத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்று மற்றும் நாளைக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் வரும் 20ஆம் தேதி வரை தாமதக் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்