Skip to main content

மதுபோதையில் கணவன் கொடுத்த டார்ச்சர்; வீட்டிற்குள் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Drunken husband incident his wife

 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருநீலம் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 32 வயதான இவர், தான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், புருஷோத்தமனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அருகே உள்ள ஆர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான முனியம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளன.

 

இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், புருஷோத்தமனுக்கும் முனியம்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவியின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக புருஷோத்தமனுக்கும் முனியம்மாவுக்கும் ஏற்பட்ட தகராறு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்நிலையில், புருஷோத்தமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இத்தகைய சூழலில், காலப்போக்கில் மது போதைக்கு அடிமையான புருஷோத்தமன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அந்த நேரத்தில், தள்ளாடிய போதையில் வீட்டிற்கு வரும் புருஷோத்தமன் தன் மனைவி முனியம்மாவிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர்களுக்குள் மோதல் முற்றி, மனைவி முனியம்மா மற்றும் குழந்தைகளை புருஷோத்தமன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முனியம்மா தினந்தோறும் கண்ணீரில் நாட்களை கழித்து வந்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், புருஷோத்தமனின் செயலால் பயந்துபோன முனியம்மா, அவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் ஆர்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், இது புருஷோத்தமனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தாய் வீட்டிற்குச் சென்ற முனியம்மாவும் வீடு திரும்பவில்லை. அப்போது, புருஷோத்தமனுக்கு முனியம்மா மீது ஏற்பட்டிருந்த கோபம் குடி போதையில் வெறியாக மாறியுள்ளது. அன்றைய நாள் ஒரு கோர திட்டத்துடன் புருஷோத்தமன் ஆர்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 

அப்போது, குடிபோதையில் இருந்த புருஷோத்தமன் தன் மனைவி முனியம்மாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். போதையில் அவரை துன்புறுத்தியபடி வீட்டுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஒத்துழைக்காத முனியம்மா தன்னுடைய முடிவில் சரியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் முனியம்மாவை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்த டேபிள் ஃபேன் வயரால் கழுத்தை இறுக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முனியம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும், இதில் படுகாயமடைந்த முனியம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

அதன்பிறகு, சுதாரித்துக்கொண்ட புருஷோத்தமன், தன்னுடைய மனைவி முனியம்மாவின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, ஒரு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ரத்தக் கரையுடன் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் புருஷோத்தமனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர். அதன்பிறகு, முனியம்மாவின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, புருஷோத்தமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை தேடித் சென்று கொலை செய்த சம்பவம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.