தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி எழுச்சி நடைப்பயணத்தை மேற்கொள்கிறார் பாமக தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
காவிரி உபரி நீர் திட்டத்தின்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை நிரப்பக் கோரி தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 19-ந்தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைப் பயணத்தை துவக்குகிறார் டாக்டர் அன்புமணி.
ஒகேனக்கல்லில் தனது நடைபயணத்தை துவக்கும் அன்புமணி, ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டையன்குட்டை, பென்னாகரம், நல்லாம்பட்டி, பி.அக்ரகாரம், நாகதாசம்பட்டி, சேமனஅள்ளி, இண்டூர், அதகப்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறார்.
ஆகஸ்ட் 20-ந்தேதி கரும்பட்டி, சோலைக்கொட்டாய், நடுப்பட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஅள்ளி, நத்தமேடு, ஜாலியூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி ஆகிய கிராமங்களில் அவரது பயணம் தொடர்கிறது. கடைசி நாளான ஆகஸ்ட் 21-ந்தேதி கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், அகோபிநாதம்பட்டி, கோபாலபுரம், மெணசி, பாப்பிரெட்டிபட்டி, பொம்முடி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்தப் பயணத்தில் பாமகவினர், மாவட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். காவிரி உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தினால் தர்மபுரி மாவட்டம் மட்டும் அல்ல, அருகாமை மாவட்டங்களிலும் நிலத்தடி நீரும் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் அதிகரிக்கும் என்கிறார்கள் பாமகவினர்.