Skip to main content

என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

dmk volunteers struggle against NLC , tamilians ignored action

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று நிறுவன இணையத்தில் பட்டியல் வெளியிட்டது. இந்த 1,582 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

 

என்.எல்.சி நிறுவனத்தின் இந்தத் தமிழர் விரோத போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நெய்வேலி பெரியார் சிலை அருகில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ, நெய்வேலி சபா.இராசேந்திரன் எம்.எல்.ஏ, புவனகிரி சரவணன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "என்.எல்.சி இந்தியா நிறுவனம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வீடு, நிலங்களைக் கொடுத்து என்.எல்.சி நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். என்.எல்.சி நிறுவனத்தில் தொடர்ந்து கடந்த ஜந்து ஆண்டுகளாக வடமாநில இளைஞர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர்.

 

dmk volunteers struggle against NLC , tamilians ignored action

 

இந்நிலையில் தற்போது நடைபெற்ற பொறியாளர்கள் நேர்முகத் தேர்வில் 1,582 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. என்.எல்.சி நிறுவனம் கேட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அதில் தமிழக இளைஞர்களுக்கு 50% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் அடிமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினால் வெளியேற்றப்படும் புகையால் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், என்.எல்.சி ஊழியர்களுக்கும் சிறுநீர் மற்றும் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் என்.எல்.சி நிறுவனம். என்.எல்.சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த அப்ரண்டிஸ் தொழிலாளர்கள், என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

மேலும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் நெய்வேலியில் உள்ள தொழிலாளர்கள் அல்லாதவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது நடைபெற்ற பொறியாளர் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்யாவிட்டால், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும்" என்றார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் இள.புகழேந்தி, ஐயப்பன், தொ.மு.ச பேரவை இணைப்பொதுச் செயலாளர் சுகுமார், துணை செயலாளர் வீர.ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் மற்றும் அணி நிர்வாகிகள், என்.எல்.சி அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்