Skip to main content

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடந்துவந்த ஐ.டி.ரெய்டு நிறைவு!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

dmk party leader home and colleges incometax raid

 

தமிழகத்தில் 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தும் முடிந்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், நேற்று (25/03/2021) திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். எ.வ.வேலுவின் கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களிலும், அதேபோல் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாகப் புகாரளிக்கப்பட்டதால், இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று தொடங்கிய சோதனை, இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில், மாலை 05.00 மணியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. சோதனையை முடித்துக் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 8 கார்களில் சென்னைக்குப் புறப்பட்டனர்.

 

எ.வ.வேலுவின் வீடு, அறக்கட்டளை, கல்லூரிகள் உள்ளிட்ட 12- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்