Skip to main content

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், மாணவர்களும்  மீட்பு பணிக்கு வர வேண்டும்- இயக்குநர் கௌதமன் பேட்டி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
g

  

 கீரமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இயக்குநர் கௌதமன் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை செய்ய உடனே வர வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் பல லட்சம் மரங்கள் ஒடிந்து வீடுகள், கடைகள், இழந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் பகுதியில் 4 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


    இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிக்கு அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
    இந்த நிலையில் இயக்குநர் கௌதமன் கீரமங்கலம் சேந்தன்குடி, நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயிகளிடம் கேட்டறிந்தார். 


    பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,   புதுக்கோட்டை மாவட்டம் மரம் தங்கச்சாமியால் மரங்கள் வளர்க்கப்பட்ட மாவட்டம். அவரால் செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த மரங்கள் ஒடிந்து சாய்ந்துவிட்டது. தமிழகம் முழுவதும் பல கோடி மரங்கள்  சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. இனி இந்த மரங்களை வளர்க்கவும், இந்த அவலத்தில் இருந்து மீளவும் சுமார் 20 ஆண்டுகள் ஆகும். இத்தனை பெரிய இழப்பு எற்பட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை. நிவாரணப்பணிகளும் நடக்கவில்லை.


    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது பற்றி பேசக் கூட இல்லை. உடனடியாக துணை ராணுவத்தை அனுப்பி மீட்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து மத்திய அரசின் நிவாரணம் வழங்க வேண்டும்.   

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு, நெடுவாசல், கொத்தமங்கலம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் தென்னை, பலா, தேக்கு, போன்ற மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளது. பல பகுதிகளில் அரசு நிவாரணமாக சோறு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறன்றனர். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்