Skip to main content

காய்ச்சலா மருத்துவரை பாருங்கள்... டெங்கு விழிப்புணர்வு பணியில் ரஜினி மக்கள் மன்றம்! 

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் மரணங்கள் நிகழ்கின்றன. நான்கு வயதான பள்ளி மாணவி நட்சத்திரா உட்பட பெரியவர்கள், சிறியவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் 800- க்கும் குறைவானவர்களே டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் என்கிறது. பொதுமக்கள் தரப்பிலோ ஆயிரக்கணக்கானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. மாவட்ட காவல்துறையும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தரும் பணியை தொடங்கியுள்ளது.
 

DENGUE AWARENESS PROGRAM CONDUCTED BY VELLORE RAJINI MAKKAL MANDRAM


இந்நிலையில் டெங்கு பரவாமல் தடுத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் பணிகளில் ரஜினி மக்கள் மன்றமும் இறங்கியுள்ளது. வேலூர் மாநகரம் இரண்டாவது மண்டல ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 20ந்தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, மாவட்ட இணை செயலாளர் ஆர்.நீதி (எ) அருணாச்சலம் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ஊர்வலமும் சென்றனர். அப்போது பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், டெங்குவை ஒழிப்போம், விவசாயத்தை காப்போம் என முழக்கமிட்டபடி சென்றனர். 

DENGUE AWARENESS PROGRAM CONDUCTED BY VELLORE RAJINI MAKKAL MANDRAM


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி, நமது முன்னோர்கள் சொல்வார்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று. என்னதான் நம்மிடம் கோடி கணக்கில் பணம் இருந்தாலும் நோய் என்று ஒன்று வந்துவிட்டால் மன நிம்மதி போய்விடும். நோய் வந்த பின் அதற்காக வருந்துவதை விட நோய் வரும் முன் அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். இது ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 3 லட்சம் தட்டணுக்கள் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை தான் குறையும். தினம் தினம் தட்டணுக்கள் குறைந்து வந்து 20 ஆயிரத்துக்கும் குறைவானதாகும்போது உயிரிழப்பு ஏற்படும். அதனால் இதனை நாம் கவனத்தில் கொண்டு டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க முதலில் நாம் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்காமல், நாமாகவே இந்த காய்ச்சல் தான் முடிவு செய்து மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்வது தவறு.

DENGUE AWARENESS PROGRAM CONDUCTED BY VELLORE RAJINI MAKKAL MANDRAM

அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கு சென்று மருத்துவரை பார்த்து சிசிக்சை பெறவேண்டும், தொடர் காய்ச்சல் இருந்தால் அவர் இரத்த பரிசோதனை செய்யச்சொல்வார் அதனை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் தேவையான சிகிச்சை பெற்றால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ளலாம், பிறருக்கு பரவாமல் தடுக்கலாம். டெங்கு எவ்வாறு பரவுகிறது என்றால் டெங்குவால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடித்தால் அவருக்கும் டெங்கு பரவும். எனவே இந்த தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வரும் முன் காப்போம் நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். தலைமை உத்தரவிடும் முன்பே விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்