திருச்சி மாவட்டம், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜவஹரை கண்டித்து இன்று காலை திருச்சி அருணாச்சலம் மன்ற வாயிலில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அவர் கூறுகையில்; “கடந்த 17-4-22 அன்று அருணாசலம் மன்றத்தில் தியாகி கக்கன்ஜி போட்டோ திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிந்து நாங்கள் சென்ற பின்னர் தியாகி கக்கன்ஜி அவர்களின் போட்டோவை மாவட்டத் தலைவர் ஜவஹர் கழற்றிவிட்டார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக மாநிலத் தலைவர் அழகிரி அவர்கள் தலையிட்டு மாவட்டத் தலைவர் ஜவஹரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முரளி, நிர்வாகிகள் குமார், ஜி.எம்.ஜி மகேந்திரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.