Skip to main content

பெரியவர்கள் கூறியதை மீறி ஏரியில் குளித்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

 

Cuddalore two children incident


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள காஞ்சிராங்குளம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் மனிஷா(12). அதே கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் மேகலா(12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள கிராமத்தில், அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். தோழிகளான இவர்களிருவரும் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் விளையாடச் சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகள் இருவரையும் பல இடங்களில் தேடினர். 

 

இந்நிலையில் வீட்டிலிருந்து விளையாடச் சென்ற சிறுமிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள காஞ்சராங்குளம் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் 'கடந்த சில தினங்களாக மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது, குளிக்கக்கூடாது' எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனையும் மீறி அவர்கள் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியில் அதிக அளவில் மணல் எடுத்து, ஆழப்படுத்தி இருந்ததால், ஆழம் தெரியாமல் சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் உடனடியாக ஓடோடி வந்து ஏரிக்குள் குதித்து சிறுமிகளைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுமிகள் இருவரும் இறந்துவிட்டனர். பின்னர் மணிஷா, மேகலா ஆகியோரது உடல்களை மீட்டனர்.

 

இத்தகவல் பிள்ளைகளை தேடி வந்த பெற்றோருக்குத் தெரிய வந்து உடனடியாக அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்த இரண்டு சிறுமிகளின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "2 சிறுமிகள் உயிரிழந்த இந்த ஏரியில் முறையான குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும், அளவுக்கதிமாக பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்படுவதால், ஏரிக்குள் இறங்குபவர்கள் எந்தப் பகுதி ஆழம் மிகுந்த பகுதி, எந்தப் பகுதி ஆழம் குறைவான பகுதி என்று தெரியாமல் ஏரியில் இறங்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது". என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும், "இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம்" எனக் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.