Skip to main content

2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை..! காணமால்போன கணவர்.. போலீஸ் தீவிர விசாரணை..!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

Cuddalore family problem women passes away with her children police investigation


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்கடாம்பேட்டை அடுத்த வேகாக்கொல்லை, பிள்ளைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவரான ஐயப்பன் (34) என்பவரின் மனைவி சுதா(30). இவர்களுக்கு திலோக்நாத் (4) என்ற மகனும், ஐஸ்வர்யா (3) என்ற மகளும் உள்ளனர்.  கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு  நிலவிவந்தது. இதனையடுத்து நேற்று மதியம் தம்பதிகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். 


 

சிறிது நேரத்துக்குப் பின்னர் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவரது பேர குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்தனர். மேலும் மருமகள் சுதா தனது சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதையடுத்து நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் சினேகப்பிரியா, வடலூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். 

 

முதல் கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  சுதா, தனது இரண்டு குழந்தைகளையும் தனது ஆடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து மூன்று பேரின் சடலங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 

இதற்கிடையில் கணவர் ஐயப்பன், நேற்று வீட்டில் இல்லை. அதனால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஓடப்பன்குப்பத்தைச் சேர்ந்த சுதாவின் தந்தை சுப்பிரமணியன் காவல்துறையில் அளித்த புகாரில், ‘தனது பேரக் குழந்தைகள் மற்றும் மகள் உடலில் காயங்கள் உள்ளது. அவர்கள் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. சுதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதகவும்,  கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வந்து 3 பவுன் நகையை வாங்கிச் சென்ற நிலையில், கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு குழந்தையுடன் சுதா உயிரிழந்துள்ளார். எனவே சாவில் மர்மம் இருக்கிறது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.