Skip to main content

வாய்க்காலில் உலா வரும் முதலைகள்; விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

crocodiles strolling irrigation way farmers and public panic 

 

சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள பாலமான் வாய்க்காலானது வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், நற்கந்தன்குடி, கொடிபள்ளம், கோவிலாம்பூண்டி, மீதிகுடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பாசன வசதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. 

 

இந்த வாய்க்காலில் மழைக் காலங்களில் சிதம்பரம் அருகே உள்ள வக்கரமாரி ஏரியில் உள்ள முதலைகள்  மற்றும் அதன் குட்டிகள், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் போன்ற தாழ்வான நீர்நிலைப் பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதுபோன்று தஞ்சம் அடைந்த முதலைகள் வயல்வெளியில் வேலை செய்துவிட்டு மாலை நேரங்களில் குளிக்கவும் கை, கால்களைக் கழுவும்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முதலை கடிக்கு ஆளாகி  சிதம்பரம் பகுதியில் பல பேர் உயிரிழந்து உள்ளனர்.

 

மேலும் பலர்  கால் மற்றும் கைகளை இழந்து, காயங்களுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இதேபோல் சிதம்பரம் ஓ.பி மெயின் ரோடு வழியாகச் செல்லும் பாலமான் வாய்க்காலில் முதலைகள் தற்போது தஞ்சமடைந்துள்ளன. இவ்வாறு தஞ்சமடைந்த முதலை ஒன்று புதன்கிழமை மாலை வாய்க்கால் கரையில் படுத்திருந்ததைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனால் முதலை வாய்க்காலின் உள்ளே சென்றுவிட்டது.  இந்த வாய்க்காலில் இதேபோல் பெரிய மற்றும் சிறிய அளவிலான பல முதலைகள் உள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

இதனால் பாசனத்திற்குச் செல்லும் நீரில் முதலைகள் சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளைக் கடிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே இந்த முதலையைப் பிடிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், இந்த வாய்க்காலில் முதலை உள்ளது எனப் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரம் வழங்கியும், பொதுமக்கள் யாரும் வாய்க்கால்களில் இறங்கி கை மற்றும் கால்களைக் கழுவ வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்