Skip to main content

அரசு கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரிய வழக்கு!-அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020


அரசு கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்  மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில் -

 

Court issues notice to ariyalur collector

 

அரியலூரில் கடந்த 1965-ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு கல்லூரி செல்ல போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் இதுவரை இல்லை. பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தினமும் நடந்துதான் செல்கின்றனர். தேர்வு நேரங்களில், சரியான நேரத்தில் கல்லூரிக்குச் செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இவர்களுக்கு உள்ளது. அரியலூரைச் சேர்ந்த பொதுமக்கள், கல்லூரிக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க பல முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை. இதனால், இந்த கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்கும்படி அரியலூர் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பொதுமேலாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கு தகுந்த பஸ் வசதி செய்து கொடுக்க கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் - கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.ஹேமலதா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் அரியலூர் மாவட்ட கவல்துறை கண்காணிப்பாளரை,   தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக நீதிபதிகள் சேர்த்தனர். பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்