Skip to main content

இருமலுடன் தொடங்கும் கரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்!- தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

இருமலுடன் தொடங்கும் கரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மொபைல் அழைப்புகளின் போது, இருமலுடன் தொடங்கும் விழிப்புணர்வு விளம்பரத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மத்திய சுகாதாரத்துறை விளம்பரப்படுத்தி வருகிறது.

coronovirus caller tune chennai high court case

இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விளம்பரம் எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் ரிங்டோனை பயன்படுத்துவது மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 

Next Story

‘3ஆம் பாலினத்தவர் உள் இடஒதுக்கீடு ரத்து’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Court action order on Cancellation of seat reservation for 3rd gender

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்‌ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02-06-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.