Skip to main content

'அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

 

coronavirus lockdown relaxation same to all districts chief minister announcement

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02/07/2021) அறிவித்தார். மேலும், ஜூலை 5- ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (02/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 08.00 மணி வரை செயல்படலாம். கடைகளின் நுழைவு வாயிலில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். கடைகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. உணவகங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களில் குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியின்றி 50% பயணிகள் பேருந்து இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

 

50% வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் ஜிம்கள், விளையாட்டுகள், உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். பொருட்காட்சி அமைப்பாளர், விற்பனைக் கூடங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிப் போட்டிருக்க வேண்டும். 

 

பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் 50% பேருடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூங்காக்களில் திறந்தவெளியில் நடத்தப்படும் விளையாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும். தண்ணீர் (Water Sports) தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ- பதிவு முறை ரத்துச் செய்யப்படுகிறது.

 

SRF/JRF, M.Phil., Phd., ஆராய்ச்சி மாணவர்கள் கல்விச் சார்ந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களின் கல்விச் சார்ந்தப் பணிகளுக்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசுப் பயிற்சி நிலையங்கள், மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பயிற்சி நிலையங்கள்/ மையங்களில் 50% பயிற்சியாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புதிய தளர்வுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 5- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.