கரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வரும் சூழ்நிலையில் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது.
பேரிடர் காலகட்டத்தில் மக்களை காப்பாற்றுவதே முதன்மையானதாகும். உயிரா? படிப்பா? என்றால் உயிரே முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும். ஆனால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு ஜூலை 26 ந்தேதி நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. கரோனாவால் ஊரடங்கு காலத்தில் வயிற்றுப்பசியாற்றுவதற்கே திண்டாடும் நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்ள எப்படி ஆயத்தமாக முடியும். நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவுசெய்தவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளார்கள். இதில் 20,000 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னல் வேகத்தில் கரோனா பரவி நாடு முழுவதும் 40,000 ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் 3,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா எப்போது முடிவுக்குவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு உடலும் மனசும் ஒருநிலையில் இல்லை. இந்நிலையில் நீட் தேர்வு அறிவிப்பு மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும், மனஉளைச்சலிலும் உள்ளார்கள்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் தலைவர் பி.கே.இளமாறன் அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு போதிய வசதியின்றி தவிப்பதும் வெளியே வராத சூழலிலும், இணையதள வசதி இயக்கம் சரிவர தொடர்பு இல்லாததாலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
தேர்வு நடந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களும் உள்ளார்கள். எனவே பேரிடர் காலம் என்பதால் நீட் தேர்வினை ரத்துசெய்து, பழைய முறையான பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவசேர்க்கையினை நடத்திட ஆவணசெய்ய செய்யவேண்டும். இல்லையேல் கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாநிலஅரசே ஒரு நுழைவுத்தேர்வு வைத்து தேர்வுசெய்து இடமளிக்கலாம். எனவே, மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் நீட் தேர்வினை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும் என்றார்.