Skip to main content

அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு; அதிரடி காட்டிய ஆட்சியர்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Collector Mercy Ramya conducted inspection at the government school

புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஊரில் நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, செல்லும் வழியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குள் சென்று ஆய்வுகள் செய்வதை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், இன்று(3.1.2024) புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கந்தர்வகோட்டை பகுதிக்குச் சென்றார். பின்பு, கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறைக்குச் சென்று வகுப்பறையில் இருந்த ஆசிரியர் மணிகண்டனிடம் என்ன பாடம் நடக்கிறது என்று கேட்ட ஆட்சியர், மாணவர்களிடமும் கேள்விகள் கேட்டார். ஆய்வகங்களை பயன்படுத்திதான் பாடங்கள் நடத்தப்படுவதாக மாணவர்கள் சொன்னதும், நல்லது இது போன்ற ஆசிரியர்கள் முயற்சியால் தான் மாணவர்கள் உயர்ந்த இடங்களுக்கு வர முடியும். இது போன்ற ஆசிரியர்களை பின்பற்றுங்கள் என்று மாணவர்களிடம் கூறினார். தொடர்ந்து வகுப்புகளில் நன்றாக பாடம் நடத்துங்கள் என்று ஆசிரியரிடம் தெரிவித்தார்.

அப்போது சில வகுப்புகளில் மாணவர் வருகைப் பதிவுகளைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், ஏன் நிறைய மாணவர்கள் பல நாட்களாக வராமல் உள்ளனர். உடனே என்ன காரணம் என்பதைப் பாருங்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறினார்.

தொடர்ந்து, “எஸ்எம்சி தலைவி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சேர்மன் ஆகியோரை அழைத்து இந்தப் பள்ளியில் 3 முதல் 15 நாட்கள் வரை நிறைய மாணவர்கள் வராமல் உள்ளனர். இப்படி விடமுடியாது. இவர்கள் ஏன் வரவில்லை என்பதை உடனே தெரிஞ்சுக்கனும். அதனால பிடிஏ, எஸ்.எம்.சி கூட்டத்தை நடத்தி பெற்றோர்களிடம் பேசுங்க. எல்லா மாணவர்களும் பள்ளிக்கு வர நடவடிக்கை எடுங்க. பிடிஏ, எஸ்எம்சி கூட்டம் போடுவாங்க அவங்க கூட நீங்களும் வந்து பெற்றோர்களிடம் பேசினால் மாணவர்களை அழைத்து வந்துவிடலாம் அதனால நீங்களும் பேசுங்க” என்று சேர்மனிடம் கூறினார்.

தொடர்ந்து கழிவறைகள், சுற்றுச்சுவர் உள்ளதா என்று கேட்டுவிட்டு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியுள்ளதை  கண்டுபிடித்து, அவர்களிடம் காரணம் கேட்டு பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.