நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார்.
முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கரோனா நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் கடைப்பிடித்ததால் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அயராத உழைப்பால் கரோனா குறையத் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசின் நடவடிக்கையால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. 6,363 காய்ச்சல் முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர். நீலகிரியில் ரூபாய் 447 கோடியில் மருத்துவ கல்லூரியுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள்ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே. பெற்றோரின் கருத்துகளுக்கு ஏற்ப பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். பெற்றோர், ஆசிரியர் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏர் அம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையில் காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது" இவ்வாறு முதல்வர் கூறினார்.