தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தியது.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டில், திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய ஆறு இடங்களில் பயிற்சி மையங்கள் நடந்துவருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு ஆண்டில், ஆகமம், பூஜை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்றுவந்த நிலையில், இந்த ஆண்டு மூன்று பெண்கள் இணைந்து அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.
ஸ்ரீரங்கம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேனி மற்றும் ரம்யா ஆகிய மூன்று பெண்கள் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். இவர்களுக்கு பயிற்சி நிறைவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2022 - 2023ம் ஆண்டுக்கான அர்ச்சகர் பயிற்சியில் 94 நபர்கள் ஈடுபட்டனர். இவர்களது பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அந்த மூன்று பெண்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...” என்று பதிவிட்டுள்ளார்.