Skip to main content

“பக்தர்கள் மனநிறைவு அடைவதைத்தான் அரசும் விரும்புகிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Chief Minister M.K.Stalin wants the devotees to be satisfied

 

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சென்னை இராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 34 ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கிய முதல்வர் அவர்களை வாழ்த்தினார்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளிவைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருத்தியல் என்பது இதுதான்.

 

நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக, ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவில்களை மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடத்திட வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நீதி கட்சி தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. 

 

‘கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது’ என்று பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் வசனம் எழுதினார்கள். அதே உணர்வோடுதான் கோவில்களில் எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கலைஞர் எந்த அளவிற்கு எச்சரிக்கையோடும் கவனத்தோடும் செயல்பட்டார்கள் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். கலைஞரின் ஆட்சிக்காலம் என்பது அனைத்துத் துறைகளின் பொற்காலமாக இருந்ததைப் போல இந்து சமய அறநிலையத் துறையில் இன்று பொற்காலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி வந்த பிறகு திருக்கோவில்களுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

 

Chief Minister M.K.Stalin wants the devotees to be satisfied

 

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் திருக்கோவில் சார்ந்த பணிகள் மற்றும் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள்  மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனை நான் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பாக வெளியிட்டேன். கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

 

திமுக அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களின் எண்ணிக்கையை 1250 ஆகவும் நிதியுதவியை தலா ரூ. 2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. ஏழை எளிய இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு, 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

 

Chief Minister M.K.Stalin wants the devotees to be satisfied

 

இதன் மூலமாக கோயில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். மறைந்த பெரியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் 'கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்' என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமண விழாக்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்தத் துறைக்கு இந்து சமயத் துறை என்று பெயரல்ல, இந்து சமய அறநிலையத் துறை என்று பெயர். அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்