தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மே 22- ஆம் தேதி சேலம் வருகிறார்.
தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. இதையொட்டி, தி.மு.க. அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மே 8- ஆம் தேதி முதல் மே 22- ஆம் தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடக்கின்றன.
அதன்படி, ஓராண்டில் அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம், சேலம் மாவட்டம் ஆத்தூரில் மே 22- ஆம் தேதி நடக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையடுத்து, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்ரமணியன், ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் செழியன், மணி என்கிற பழனிசாமி, நரசிங்கபுரம், நகர செயலாளர் வேல்முருகன், நகரமன்ற தலைவர்கள் நிர்மலா பபிதா மணிகண்டன், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.