Skip to main content

சிதம்பரம் கோயிலில் ஆகம விதிகளை மீறியது தொடர்பாக தீட்சிதர்களிடம் விசாரணை.

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில்  கடந்த 11-ந்தேதி தொழிலதிபர்கள் குடும்ப திருமணம் ஆகம விதிகள் மற்றும் மரபுகளை மீறி தடபுடலாக நடத்தப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு சிவபக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் இது வைரலாகியது.

இந்த நிலையில் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு அனுமதியளித்த தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிலர் சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் புகார் கொடுத்த தரப்பினரையும், தீட்சிதர்கள் தரப்பினரையும் அழைத்து சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

chidambaram temple issue dikshidars police investigation

இதில் தீட்சிதர்கள் சார்பில் பட்டு, நவமணி, பாஸ்கர் தீட்சிதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயிலில்  நடைபெற்ற சம்பவம் வருந்ததக்கது என்றும் சம்பந்தபட்டவர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எழுத்து பூர்வமாக வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். இதன் பேரில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தவர்கள் புகாரை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர். இது குறித்து வரும் 23-ந்தேதி சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் அடுத்தக்கட்ட கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருமணம் நடத்தியவர்கள். தீட்சிதர்கள், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவுசெய்தவர்கள் என அனைவரையும் வரவழைத்து கூட்டம் நடைபெறும் அறிவித்துள்ளார்.


காவல் நிலையத்திற்கு அழைத்து தீட்சிதர்களை விசாரணை செய்த சம்பவம் சிறு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமதி என்ற பெயரில் ஆகம விதியை மீறி நடராஜர் கோயிலை நட்சத்திர ஓட்டலாக மாற்றிய தொழிலதிபர்கள் மீதும் அந்த கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.   



 

சார்ந்த செய்திகள்