சிதம்பரம் காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவரும் பேருந்து நிலையத்தில் அமர்ந்து தாலி கட்டிக் கொண்டுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகளின் அடிப்படையில் சிதம்பரம் நகர பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தகவல் அறிந்து சமூக நலத்துறை குழந்தை நல அலுவலர் ரம்யா, சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளை சிதம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவி கடலூர் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அறிவுரை வழங்க அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட சிதம்பரம் நகர போலீசார் மாணவனை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் திருமணம் செய்த காட்சிகளை வெளியிட்டதாக சிதம்பரம் அருகே கோவிலாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அப்பொழுது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.