Skip to main content

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும்!- உயர்நீதிமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020


 

chennai high court  National Medical Commission

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெற்று, கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள மாணவர்களுக்காக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. 

 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால், கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

 

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக்கோரி, மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60  மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்கக் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும் என,  தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மனுதாரர் உள்ளிட்ட 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

 

இதையடுத்து, இந்த 60 மாணவர்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ள யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை டிசம்பர் 18- ஆம் தேதிக்கு தள்ளி்வைத்தார்.


 

சார்ந்த செய்திகள்