Skip to main content

நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் போதும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்குத் தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்யக் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு, நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாலேயே கட்டுப்பாடு என விளக்கம் அளித்தது. 
 

chennai high court judgement tn govt

 

இந்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று (16/04/2020) விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திமுக உதவிகள் வழங்குவதும், வழக்கு தொடர்ந்ததும் பொது நலனுக்கா, விளம்பரத்துக்கா எனத் தெரியவில்லை. நன்கொடை வழங்கிய சிவ்நாடார் போன்றோர் முதல்வரை சந்திக்கவோ, புகைப்படம் எடுக்கவோ விரும்பவில்லை. கரோனா எவ்வளவு மோசமானது என மக்களுக்குப் புரிந்ததைப் போல திமுகவும் புரிந்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டார். 

அதைத் தொடர்ந்து திமுக தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள், அரசின் நிபந்தனைகளுடன், கரோனா நிவாரண உதவிகளைச் செய்திட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். மேலும் நிவாரண உதவிகள் வழங்கிட மூன்று பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். விநியோகிப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை. போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்