Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான பார்வையை மாற்ற நல்ல வாய்ப்பு!- மாணவிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

chennai high court government schools students

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்கச் செய்ய ஏதுவாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என, நவம்பர் 20- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி, மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,‘அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு கிடைக்கும் 160 இடங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும். சில மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதல் இடங்கள் கிடைக்கும்.’எனத் தெரிவித்தார். 

 

இதையடுத்து,‘முதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு, தனியார் கல்லூரிகளில் இடம் பெற்றும், கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால் மருத்துவ இடம் கிடைக்கும் என்ற உத்வேகத்தை வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.’ என அறிவுறுத்திய நீதிபதி, 51 மாணவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர்  17- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்