Skip to main content

சென்னையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து 2 வடமாநில வாலிபர்கள் மீது கொடூர தாக்குதல்..!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
aatt



குழந்தை கடத்த வந்ததாக தவறாக நினைத்து, வடமாநில வாலிபர்கள் இரண்டு பேரை தேனாம்பேட்டையில் பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பலரின் மீதும் தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. அதில் குறிப்பாக வடமாநில வாலிபர்களை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பரவி இருந்த இந்த சந்தேகத்தீயானது தற்போது சென்னையிலும் பரவ தொடங்கியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு அவினாஷ் (4) என்ற மகன் உள்ளான். வரலட்சுமி தனது மகன் அவினாஷை வீட்டில் விட்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுள்ளார். வரலட்சுமியை பின்தொடர்ந்து அவினாஷ் ஓடியுள்ளான். அதை அவர் கவனிக்கவில்லை. அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர், அந்த வழியாக தங்கள் அறைக்கு சென்றுள்ளனர். சிறுவன் மட்டும் தனியாக ஓடுவதை பார்த்த வடமாநில வாலிபர்களில் ஒருவன், அந்த சிறுவனை மடக்கி எங்கே செல்கிறாய் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது வரலட்சுமி வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த கொருக்குபேட்டையை சேர்ந்த செல்வராஜ் என்ற வாலிபர், இதை பார்த்து வடமாநில வாலிபர்களிடம் குழந்தையை கடத்த வந்தீர்களா என்று சத்தம் போட்டுள்ளார்.

 

 

இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரும் பயத்தில் சிறுவனை விட்டுவிட்டு வேகமாக அவர்கள் அறைக்கு சென்றனர். உடனே செல்வராஜ், குழந்தை கடத்த வந்த கும்பல் என்று சத்தம் போட்டபடியே உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் பைக்கில் வடமாநில வாலிபர்களை துரத்தி சென்று தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் 2 வடமாநில வாலிபர்களை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்களும் என்ன என்று கேட்காமல் அனைவரும் சேர்ந்து சிக்கிய 2 வாலிபர்களையும் கைகளை கட்டிப் போட்டு அடித்து உதைத்தனர்.

ஒரு கட்டத்தில் 2 வாலிபர்களும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து இரண்டு வாலிபர்களையும் மீட்டனர். இருவரும் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 5 வாலிபர்களும் ஒடிசா மாநிலம் தேபாகர் மாவட்டம் கண்டால் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரும் தேனாம்பேட்டையில் வீடு எடுத்துள்ளனர். இவர்களில் 2 பேர் நேற்று முன்தினம் பணி முடிந்து தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலை வழியாக காமராஜர் சாலை அடைந்து அறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுவன் அவினாஷ் தனது அம்மா வரலட்சுமி பின்னால் சென்று உள்ளான்.

இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரலட்சுமி வீட்டின் அருகே வசித்த போது, சிறுவன் அவினாஷடன் பழகியுள்ளனர். இதனால் சிறுவனை பார்த்ததும் எங்கே போகிறாய் என்று கேட்டு சிறுவனை தூக்கி உள்ளனர். இதை பார்த்த செல்வராஜ் என்ற வாலிபர், என்ன என்று கேட்காமல் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து அடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வடமாநில வாலிபர்களை தாக்கிய நபர்கள் யார் யார் என்பது குறித்து வீடியோ பதிவு மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்