Skip to main content

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கு!- பிப்ரவரி 1- ஆம் தேதி தீர்ப்பு! 

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1- ஆம் தேதி வழங்குவதாக சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதின்றம் அறிவித்துள்ளது. 
 

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்த பணியாளர்கள் உள்ளிட்ட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கடந்த 2018 ஜூலை மாதம் கைது செய்தனர்.

chennai 12 year child incident chennai special court announced judgement date

இந்நிலையில், இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5- ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தைக் கடந்த ஆண்டு ஜனவரி 11- ஆம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், 17 பேருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகின்றனர்.
 

இந்நிலையில், 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகிளா நீதிமன்றம் தொடங்கியது. விசாரணை காலத்தில் பாபு என்பவர் மரணமடைந்தார். எனவே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் தனித்தனியாக வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.
 

இந்த வழக்கின் விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கு எனத் தொடங்கிய சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதின்றத்தில் நடைபெற்று வந்தது.
 

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, அரசுத் தரப்பில் 36 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் 6- ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து, சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்