Skip to main content

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Central Industrial Security Force soldier lost his lives himself

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடமாநிலங்களில் பணிபுரிந்து வந்த குமார், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்திற்கு மாற்றலாகி வந்துள்ளார். அந்த வகையில், இவர் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (12-12-23) இரவு காமராஜர் துறைமுகத்தின் சிக்னல் ஸ்டேஷன் அருகே இவருக்கு பணி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று (13-12-23) அதிகாலை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் குமார், நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு கையில் துப்பாக்கியுடன் தலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்பு படை வீரர் குமார் நேற்று முன் தினம் இரவு பணியில் இருந்த போது தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், குமார் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்த போது, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்