Skip to main content

ரயில் தீ விபத்து; உ.பி சுற்றுலா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

case filed against  UP Tourism company train fire accident

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்தது. 

 

இந்த நிலையில், இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து உ.பி மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தென்னக ரயில்வே காவலர் வழக்குப் பதிவு செய்ய லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணிகளை ரயிலில் அழைத்து வந்த  தனியார் சுற்றுலா நிறுவனம், ரயிலில் என்னென்ன பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்கிறோம் என்றும், ரயில்வேவின் விதிமுறைப்படி தடை செய்யப்பட்ட பொருட்களை எதுவும் ரயிலில் எடுத்து போகப்போவதில்லை என்று தெரிவித்து சான்றிதழை பெற்றுத்தான் லக்னோவிலிருந்து பயணிகளை அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக சிலிண்டர் எடுத்து வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி முதற்கட்டமாக நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்