இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, அனைத்து அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று (19/02/2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (19/02/2020) இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, அனைத்து அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி இல்லாததால் ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் திரளான பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தையொட்டி ஆட்சியர் அலுவலகம் மற்றும், போராட்ட பகுதியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையில் 500- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.