Skip to main content

ரெட் அலர்ட்டுக்கு உடைந்த முக்கொம்பு அணை தப்புமா ?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
MULLAI

 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி 9 மதகுகள் உடைந்து விழுந்தன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கின. இதற்காக ஆற்றுக்குள் முதல் கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கும் பணியும், அடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து கொட்டும் பணியும் நடந்தது. இருப்பினும் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. பாறாங்கற்களின் இடைவெளி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. 


இதனை தடுத்து நிறுத்துவதற்காக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்ததை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். 

 

தண்ணீர் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறியது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்த இடம் சுமார் 35 அடிக்கும்மேல் ஆழமான பகுதியாகும். அந்த இடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. காவிரியில் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்த தண்ணீரை புள்ளம்பாடி, அய்யன், பெருவளை வாய்க்கால்களில் திறந்து விடுவதற்காக தேக்கியதால் தான் கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகரித்தது. இதனால் தான் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன’ என்றார். இந்த நிலையில் பணிகள் முடிவடைந்தது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தமிழகத்திற்கு வரும் ஞாயிறு ரெட் அலர்ட் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். தற்போது அமைந்துள்ள இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு இது தாக்குபிடிக்குமா என்பது எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 

 

இந்த நிலையில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் சிலரிடம் பேசிய போது, கனமழை அறிவிப்பினால் விவசாயிகள் அச்சமடைய தேவையில்லை. பெரிய பாறாங்கற்கள் கொண்டு ஷட்டர்கள் உயரத்திற்கு அடைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் கதவனைக்கு அதிக தண்ணீர் வந்தாலும் அதை காவிரியில் திருப்பி விடும் அளவிற்கு பலப்படுத்தி வைத்திருக்கிறோம். உடையாத மற்ற ஷட்டர்களையும் தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வருகிறோம். மணல் முட்டைகள் கொண்டு அடைக்கும் பணியும் தற்போது முடிவடைந்துள்ளது. அந்த மணல் மூட்டை சரிந்ததும் சரி செய்து வைத்திருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி வருகிறார்கள்

ஆனாலும் இயற்கை முன்பு அனைவருமே சமம் தான். முக்கொம்பு இந்த ரெட் அலர்ட்டுக்கு தப்புமா என்பதே எல்லோருடைய கேள்வியாகவே இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்