Skip to main content

காரின் அடியில் சிக்கிய சிறுவன்; தர தரவென 3 கி.மீ. இழுத்துச் சென்ற கொடூரம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
 boy trapped under a car in Nagercoil was dragged for 3 km

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ளது ஈத்தாமொழி. இந்தப் பகுதியில் உள்ள தெற்குபால் கிணற்றான் விளையைச் சேர்ந்தவர் கோபி. இவருக்கு 39 வயது ஆகிறது. இவர், ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி தன்னுடைய பெயிண்ட் கடைகள் விடுமுறை என்பதால் 30 வயதான இவரின் மனைவி லேகா மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்லத் திட்டமிட்டிருக்கிறார். 

அதன்படி, கோபி அவரின் குடும்பத்தோடு சங்குத்துறை கடற்கரைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, கோபி தன்னுடைய காரை வேகமாக இயக்கியதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற கார், ஈத்தாமொழி அருகே உள்ள செம்பொன்கரை பகுதியில் சென்றபோது, காரின் முன்னால் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. உடனே நிலைதடுமாறி அந்த பைக் மற்றும் அதனை ஓட்டிச்சென்ற நபரும் பொத்தென்று கீழே விழுந்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அந்த நபர், கீழே கிடந்துள்ளார். ஆனால், அப்போதும் காரை நிறுத்தாமல் காரை தொடர்ந்து இயக்கியுள்ளார் கோபி. இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், ஓடிச் சென்று அந்தக் காரை பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனாலும் அவர் காரை நிறுத்தவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், காரை நிறுத்துமாறு கத்திக் கூச்சலிட்டுள்ளனர். மேலும் இளைஞர்கள் காரை நிறுத்துமாறு பைக்கில் வேகமாகப் பின் தொடர்ந்து காரை விரட்டியுள்ளனர்.

ஆனால் அதற்குள் கார் சங்குத்துறை கடற்கரை அருகே சென்றுள்ளது. இப்படியே நீண்ட தூரம் காரில் சிக்கிய பைக்கோடு காரை இயக்கியதால், அந்த பைக் சாலையில் உரசி அதிலிருந்து நெருப்பு பறந்துள்ளது. அப்போதும் அந்தக் காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியதால், அதிலிருந்து அதிகமான அளவில் தீ எழுந்துள்ளது. அப்போது காரின் முன்பகுதி திடீரென  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பதறிய கோபி மற்றும் மனைவி, குழந்தைகள் காரில் இருந்து தப்பி ஓடியதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம், சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை காரில் சிக்கிக்கொண்டே சென்றபோதும், கீழே விழாத பைக்கும் அந்த நபரும் அதே தீயில் கருகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, காரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்துள்ளனர். அதன் பின்னர், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் விபத்தில் சிக்கி பலியானது தெற்கு சூரங்குடி பள்ளி தெருவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் என்பது தெரியவந்துள்ளது. 

இவர், சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தக் காருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த பைக்கை மோதியிருப்பதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல், விபத்து ஏற்பட்டு மாணவனும் பைக்கும் கீழே விழுந்து காரில் சிக்கிய போதும் சுமார், மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை நிறுத்தாமல் அப்படியே தரதர வென பைக்கையும் மாணவனின் சடலத்தையும் இழுத்துச் சென்றது உறுதியாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், காரின் முன் பகுதியில் மாணவனின் உடல் சிக்கியிருந்த நிலையில் கார் தீ பிடித்ததால் உடல் கருகி கிடந்துள்ளது. பின்னர், பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த சிறுவன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 15 வயது சிறுவன் கார் மோதி சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாணவனின் சடலம் மற்றும் பைக்கோடு கார் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலரும் இது திட்டமிட்டக் கொலையாக இருக்கலாம் எனப் பதிவு செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.