சட்ட விரோதமாக பெட்ரோல் பங்க் இயங்க அனுமதித்த பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் அப்பல்லோ மருத்துவமனை அருகில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பு நிலம் டாக்டர் அருண் ஏ ராஜா என்பவருக்குச் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க விஜய ஆட்டோ சர்வீஸ் என்ற நிறுவனம், டாக்டர் அருண் ஏ ராஜா என்பவருடன் 20 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தனர். இதனடிப்படையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுனத்தின் உரிமம் பெற்று, விஜய ஆட்டோ சர்வீஸ் நிறுவனம், பாரத் பெட்ரோல் பங்க் அமைத்து நடத்தி வந்தது.
இதன் பின்னர், 1999 -ம் ஆண்டில் இருந்து 2009- ம் ஆண்டு வரை மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இதனிடையே பெட்ரோல் பங்கை காலி செய்து இடத்தை ஒப்படைக்கும்படி டாக்டர் அருண் ஏ ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் காலி செய்யப்படாமல், நிலமும் ஒப்படைக்கப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது.
குறிப்பாக, பெட்ரோல் பங்கிற்கான தடையின்மைச் சான்று, தீயணைப்புத் துறை அனுமதி சான்று என எந்த அனுமதியும் இல்லாமல் பெட்ரோல் பங்க் தொடர்ந்து நடத்தப்பட்டுவருவதை எதிர்த்து நில உரிமையாளர் டாக்டர் அருண் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், பெட்ரோல் பங்கின் தடையின்மைச் சான்றை நிராகரித்து, இடத்தைக் காலி செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், சட்டவிரோதமாக பெட்ரோல் பங்க் நடத்த அனுமதித்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையில் ரூ.25 ஆயிரத்தை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கும், மீதி 25 ஆயிரம் ரூபாயை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு வழங்க உத்தரவிட்டார். இதே போல் விஜய ஆட்டோ சர்வீஸ் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, 25 ஆயிரம் ரூபாயை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், மீதி 25 ஆயிரம் ரூபாயை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.