கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் 42 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என்பதும், இதில் நான்கு பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.