Skip to main content

கதவ திறங்க..... வீட்டிற்குல் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டித் தள்ளிய கும்பல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
bagwari gang style Robbery in Sivaganga

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. 40 வயதான பாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அரசி, இவருக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு ஜெர்லின் என்ற 14 வயது மகளும், ஜோபின் என்ற 10 வயது மகனும் உள்ளனர். வெளி நாட்டு வேலையில் பிசியாக இருந்து வரும் ஜேக்கப் பாரி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கு சென்று விடுவார். இவரின் தந்தை சின்னப்பன். இவருக்கு 67 வயதாகிறது. இவரின் மனைவி உபகாரமேரி இவருக்கு 65 வயது ஆகிறது. 

இந்நிலையில், ஜேக்கப் பாரியின் குடும்பத்தில் உள்ள 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல தங்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அதிகாலை 3 மணியளவில் யாரோ வீட்டை தட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேர்த்தில் யாராக இருக்குமென நினைத்த ஜேக்கப்பின் தந்தை, எழுந்து சென்று கதவை திற்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கண் மூடித்தனமாக முதியவரை வெட்டியுள்ளது. உடனே முதியவர் சின்னப்பன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு அவரின் மனைவி மற்றும் மருமகள் பேரன் பேத்தி என அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்து ஓடி வந்த அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேரும் வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

பின்னர், சிறிது நேரம் கழித்து காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்துள்ளான். அப்போது, தனது அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தக் கொடூர தாக்குதலால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுவழி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர், மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு, கொள்ளயடித்த சம்பவம் காளையார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.