Skip to main content

கணவருடன் பேசிக்கொண்டிருந்த மனைவி பலி; ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

avadi thirumullaivoyal husband and wife incident

 

ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். பொறியாளரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபிராமி (வயது 25) என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அபிராமியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில், பிரவீன்குமாரும் அபிராமியும் தங்களது வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இரண்டாவது மாடியில் இருந்து அபிராமி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அபிராமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரவீன்குமார் தனது மனைவி அபிராமியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அபிராமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

அபிராமிக்கும் பிரவீன்குமாருக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் இன்ஜினியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்