Skip to main content

ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதில் முறைகேடு!- ஒருவர் கைது!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஒப்பந்தம் எடுத்து செயல்பட்டு வருகிறது. வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று அதனை குறிப்பிட்ட ஏ.டி.எம்களில் நிரப்புவதோடு இல்லாமல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை சரி செய்யும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
 

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கணக்குகள் கடந்த 29.09.2016 அன்று தணிக்கை செய்யப்பட்டதில் ரூபாய் 22.97 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவனம் நடத்திய விசாரணையில் தணிக்கை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக நிறுவனத்தில் பணக்காப்பாளர் வேலையிலிருந்து நின்ற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை என்பவரின் மகன் சுதாகரனுக்கு (41) தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ATM MONEY ISSUES ONE PERSON ARRESTED CUDDALORE POLICE

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  பின்னர் இந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த விசாரணையில் பணக்காப்பாளரான சுதாகர், அவருக்கு பயிற்சி அளித்த மற்றொரு பணக்காப்பாளர் சிவக்குமார்,முன்னாள் பணக்காப்பாளர் பணியிலிருந்த சம்பத்குமார், சுதாகரின் நண்பர் கனகராஜ் என 6 பேர் கூட்டு சேர்ந்து ஆறு மாதத்தில் 22,97,200 ரூபாயை கையாடல் செய்தது தெரியவந்தது. இந்த பணம் விருத்தாசலம் முதல் மங்கலம்பேட்டை வரையிலான 14 ஏ.டி.எம் இயந்திரங்களில் மங்கலம்பேட்டை, பூவனூர் உள்ளிட்ட மூன்று இயந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் கணக்கு காட்டியுள்ளனர்.  


இதனிடையே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணியிலிருந்து விடுவித்துக்கொண்ட சுதாகர் அன்றைய நாளில் ரூபாய் 5 லட்சத்தை விருத்தாசலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்மில் நிரப்பி உள்ளார். எனவே மீதமுள்ள ரூபாய் 17.97 லட்சம் மோசடியாக கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  


இதற்கிடையில் கனகராஜ், சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவாகினர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் பூதாமூருக்கு வந்திருந்த சுதாகரை குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் கைது செய்து விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


இது போன்று முறையாக ஏ.டி.எம்களில் பணம் நிரப்பப்படாதல் தான் பல்வேறு காலகட்டங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்