Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து ஜோதிடர் கொடூரக் கொலை!

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Astrologer brutally incident salem

 

நாமக்கல் அருகே, புதிய காதலனுடனான தொடர்பை கைவிடும்படி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பெண் தோழி, காதலனுடன் சேர்ந்து ஜோதிடரை சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60) ஜோதிடர். இவருடைய  மனைவி பேபி (55). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதிடம் பார்ப்பதில் சுற்று வட்டாரத்தில் பிரபலமாக விளங்கி வந்த சுந்தர்ராஜன், தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் கணவரை பிரிந்து வாழும் பெண்கள், கணவரை இழந்த பெண்களை மயக்கி அவர்களுடன் தனிமையில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பரமேஸ்வரி (48) என்பவர், சுந்தர்ராஜனிடம் ஜோதிடம் பார்க்கச்  சென்றுள்ளார். அதன்மூலம் அவர்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக  இருந்துள்ளனர். இதையறிந்த ஜோதிடரின் மனைவி பேபி, கணவரை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர், பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

 

இதனால் கோபம் கொண்ட பேபி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சுந்தர்ராஜனை பிரிந்து, வெளியூருக்குச் சென்றுவிட்டார். ஏற்கனவே பலருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த சுந்தர்ராஜனுக்கு மனைவி பிரிந்து சென்றது இன்னும் வசதியாகி விட்டது. வீட்டில் தனியாக வசித்து வந்த அவருக்கு, பரமேஸ்வரி தினமும் வீட்டிற்கே சென்று உணவு சமைத்து பரிமாறி வந்துள்ளார்.  இந்த நிலையில் ஜோதிடர் சுந்தர்ராஜன், தனது வீட்டில் ஏப். 10 ஆம் தேதி காலை, குடல் சரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரை படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 

நிகழ்விடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் துப்பு  துலக்கப்பட்டது. விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகின. கொலையுண்ட சுந்தர்ராஜன், தனது பெண் தோழியான பரமேஸ்வரிக்கு தனது வீட்டை  எழுதி வைத்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, சுந்தர்ராஜன் பெயரில் உள்ள மேலும் இரண்டு வீட்டு மனைகள் மற்றும் பணத்தை தன் பெயருக்கு  எழுதிக் கொடுக்கும்படி பரமேஸ்வரி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அண்மைக் காலமாக தகராறு இருந்து வந்தது. இதனால் சுந்தர்ராஜன் மீது பரமேஸ்வரி ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து  பரமேஸ்வரிக்கு, சேந்தமங்கலம் பொட்டணம் அருகே உள்ள சாலையூரைச் சேர்ந்த தறிப்பட்டறை உரிமையாளர் நடராஜன் மகன் கார்த்தி (24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கார்த்தியுடன் பரமேஸ்வரி அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட சுந்தர்ராஜன், கார்த்தியுடனான தொடர்பை கைவிடும்படி கண்டித்துள்ளார். இதற்கு மசியாத பரமேஸ்வரி, புதிய காதலன் கார்த்தியுடன் சேர்ந்து சுந்தர்ரராஜனை தீர்த்துக்கட்டி விட திட்டம் போட்டார்.

 

இதையடுத்து, ஏப். 9 ஆம் தேதி இரவு, வீட்டில் சுந்தர்ராஜன் தூங்கிக் கொண்டிருந்தபோது பரமேஸ்வரியும், கார்த்தியும் சேர்ந்து அவரை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது. சுந்தர்ராஜனின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், உள்ளூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பரமேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில்  கார்த்தியையும் கைது செய்தனர். விசாரணையில், பரமேஸ்வரி சொன்னதன் பேரில்தான் சுந்தர்ராஜனை தான் கொலை செய்ததாக கார்த்தி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதேநேரம் பரமேஸ்வரியோ, கொலைக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து கூறி வருவதால் காவல்துறையினர்  குழப்பம் அடைந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.