Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Published on 20/08/2024 | Edited on 20/08/2024
Armstrong case Look out notice for Mottai Krishnan

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக  சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இவர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இந்த லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சம்போ செந்திலின் கூட்டாளியான இந்த மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்குப் பண உதவி செய்திருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்