Skip to main content

தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகள் நியமனம்! 

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Appointment of election officials in addition to TN

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் (06-02-2024) சென்னை வந்திருந்தனர். அதன்படி தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள் குறித்து பல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று (07.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவர்களிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளான ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்