Skip to main content

"தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்" - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

 

"AIIMS students can be admitted in Theni and Sivagangai" - Government of Tamil Nadu in court!

 

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், "2018ஆம் ஆண்டிலேயே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தைப் போன்று பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளிப்புற நோயாளிகள் பிரிவும், மருத்துவ மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுவிட்டது. 

 

ஆனால் மதுரையில் அதுபோன்ற கட்டடப் பணியோ அல்லது வேறு எந்த பணியோ தொடங்கவில்லை. ஆகவே, மதுரையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவையும், மருத்துவ மாணவர் சேர்க்கையையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக தரப்பில் தொடங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று (30/07/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தைத் தேர்வு செய்வது குறித்து தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழக அரசு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தமிழக அரசு நடப்பாண்டிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது தொடர்பாக பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. பிற மாநிலங்களில் இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுடன் எய்ம்ஸ் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போதைக்கு தற்காலிகமாக தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தேர்வு செய்யலாம். எய்ம்ஸ் நிர்வாகம் இந்த இடங்களை ஆய்வுசெய்து, பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வதோடு, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டால் மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்க ஏதுவாக இருக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது" என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

 

இவற்றைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பின்னர் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்