Skip to main content

 அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை; உறவினரின் பரபரப்பு வாக்குமூலம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

AIADMK executive lost his life in thirunelveli

 

திருநெல்வேலி மாவட்டம், கொன்கந்தான்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ்( 50). இவர் கொன்கந்தான்பாறை பகுதியில் அதிமுக கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும், இவர் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் காண்ட்ராக்ட் வேலையும் செய்து வந்தார். இவருக்கு பரஞ்சோதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

 

இந்த நிலையில், நேற்று அவரது உறவினர் இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்க மரியதாஸ் அங்கு சென்றார். அப்போது, இறந்து போன உறவினரை அடக்கம் செய்ய கல்லறை தோட்டத்தில் குழி தோண்டும் பணி நடந்தது. அதனை பார்த்துவிட்டு , மரியதாஸ் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த தாஸ் என்பவர், மரியதாஸை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்றுவிட்டார். இதில், படுகாயமடைந்த மரியதாஸ் மயக்க நிலையில் கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் முன்னீர்பள்ளம் காவல்நிலையத்திற்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரியதாஸை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.

 

அங்கு சிகிச்சையில் இருந்த மரியதாஸ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த தாஸை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை தனியார் கல்குவாரியில் பதுங்கி இருந்த தாஸை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மரியதாஸும் தாஸும் உறவினர் என்று தெரியவந்தது. தொடர்ந்து, தாஸ் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், தாஸ் பணிபுரிந்த நிறுவனத்தில் மரியதாஸ் காண்டிராக்ட் வேலைகள் பார்த்து வந்துள்ளார். அப்போது மரியதாஸின் கட்டுமான பணிகளுக்காக தாஸ் ஜல்லி கற்கள் சப்ளை செய்து வந்துள்ளார். 

 

இதனிடையே, தாஸும் புதிதாக ஒரு வீடு கட்டி ஓரளவு முன்னேற்ற அடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது பணத்தை ஏமாற்றி தான் தாஸ் வீடு கட்டியுள்ளதாக தாஸை பார்க்கும் போதல்லாம் மரியதாஸ் திட்டிக்கொண்டே இருப்பார் என்று கூறப்படுகிறது. இதில் எரிச்சலடைந்த தாஸ், இதுகுறித்து நேற்று மதியம் மரியதாஸை மறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாஸ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மரியதாஸை வெட்டியுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. உறவினரையே ஆத்திரத்தில் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்