அதிமுக - பாஜக கூட்டணியில், அண்ணாமலை பேச்சுகளால் முரண்கள் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. அப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர். அதேபோல அண்மையில் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கும் அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
அண்ணாமலை முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்து பேசியபோது கண்டன தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக, முன்னாள் முதல்வர் அண்ணாவை குறித்து பேசியதற்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியையே முறித்து வெளியேறியது.
இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. காலை முதலே தொண்டர்கள் குவியத் துவங்கிய நிலையில், அலுவலகத்திற்கு வந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றியவர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கட்சியின் 52ம் ஆண்டு துவக்க விழாவில் கொண்டாட்டமாக இருந்த அதிமுக தொண்டர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து முனுமுனுத்துகொண்டே இருந்தனர். என்ன முனுமுனுப்பு என நாம் விசாரித்தபோது, திமுகவுடன் முரண் ஏற்பட்டு எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை துவங்கினார். பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவைக் குறித்து அவதூறாக பேசியதைத் தொடர்ந்து கூட்டணியில் இருந்து தடலாடியாக விலகினோம்.
இப்படி இருக்கும்போது, இன்று அதிமுகவின் 52ம் ஆண்டு துவக்க விழாவில், தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படமே இடம் பெறவில்லை. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட வரவேற்பு அலங்கரிப்பிலும் கூட அண்ணாவின் புகைப்படம் இல்லை. இதனைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்றபடி நகர்ந்து சென்றனர். சில பேனர்களில் மட்டும் மேலே ஒரு ஓரமாக அண்ணாவின் புகைப்படம் சிறியதாக இடம் பெற்றிருந்ததையும் பார்க்க முடிந்தது.