
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரூபாய் 1.88 கோடிக்கு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி, "வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. மேலும், நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோக்களாக இருக்கவும்" அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பதிவிட்டுவந்தனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் தனி நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால், விஜய்யின் வழக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில், தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட கோரி நடிகர் விஜய் சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (22.07.2021) நீதிபதிகள் துரைசாமி, ஹேமா அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.