புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடை நிலை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், 54 பணியாளர்கள் அச்சத்தின் காரணமாக பணிக்கு வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து பணிக்கு வராத ஊழியர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) புதுச்சேரி மாநிலச் செயலர், சோ.பாலசுப்பிரமணியன், “இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரூ.3500/-, ரூ.5000/-, ரூ.6500/- என சட்டக் கூலிக்கும் குறைவாக சம்பளம் பெறுகின்றனர். இதை உயர்த்திக் கேட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சட்டக்கூலியை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமையாகும். சட்டக்கூலி கேட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுவது சட்டவிரோதமானது.
புதுச்சேரி அரசு தொழிலாளர்களை அழைத்து பேசி சட்டத்தை நடைமுறைப்படுத்தி, தொழிலாளர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என்றும் கட்சி கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சக தலைமை துறை அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல், சட்டக் கூலியை நடைமுறைப்படுத்தாமல், செயல்படுவதால், பொதுநலன் கருதி மாவட்ட ஆட்சியரை புதுச்சேரி அரசு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
வரும் 05-ஆம் தேதிக்குள் முடக்க கால ஊதியத்தை அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், வேலை அளிப்போர் பட்டுவாடா செய்வதை புதுச்சேரி தொழிலாளர் துறை உறுதி செய்திட வேண்டும் “ என கேட்டுக்கொண்டுள்ளார்.