Skip to main content

ஜவுளி நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு; சிசிடிவி கேமராவில் சிக்கிய முக்கிய தடயம்! 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

50 pound jewelry theft from  home textile yarn dealer caught on CCTV camera

 

சேலத்தில், ஜவுளி நூல் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 50 பவுன் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பாக, சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்தபோது முக்கிய தடயம் சிக்கியுள்ளதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.    

 

சேலம் மறவனேரி சின்னையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (66). ஜவுளி நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (62). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அம்மாபேட்டையில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இதையடுத்து திருநாவுக்கரசும் அவருடைய மனைவியும் மட்டும் மறவனேரியில் தனியாக வசித்து வருகின்றனர். மே 31 ஆம் தேதி மாலை தனது இளைய மகன் பிரவீன்குமாரின் மனைவியுடைய தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சூரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு தம்பதியினர் சென்று இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அணிந்து சென்ற நகைகளை, மல்லிகா கழற்றி நகைப்பெட்டியில் போட்டு, அதை டிரஸ்ஸிங் மேஜை மீது வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில், வீட்டிற்குள் பொருள்களை உருட்டும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட கணவன், மனைவி இருவரும் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது டிரஸ்ஸிங் மேஜை மீது வைத்திருந்த  நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் கத்திக் கூச்சல் போட்டனர்.  

 

இதுகுறித்து தங்கள் மகன்களுக்கும் தகவல் அளித்தனர். அவர்களும் வீட்டிற்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர்கள் சரவணகுமார், அசோகன், காவல் ஆய்வாளர் பால்ராஜ், காவலர்கள் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். மல்லிகா, நகைப் பெட்டிக்குள் வைத்த 50 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பி கதவு, மரக்கதவு ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து  அறைக்குள் நுழைந்துள்ளனர். படுக்கை அறையின் டிரஸ்ஸிங் மேஜை மீது நகைப்பெட்டிக்குள் நகைகள் அனைத்தும் இருந்தது அவர்களுக்கு வசதியாக போய்விடவே, அதை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அதேநேரம், பீரோவுக்குள் வைத்திருந்த நகைகள் அப்படியே பாதுகாப்பாக இருந்தது. தம்பதியை பார்த்ததும் மர்ம கும்பல் கைக்குக் கிடைத்த நகைப்பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

 

சம்பவத்தன்று மாலையில் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால், இரவிலும் யாரும் வர மாட்டார்கள் என மர்ம நபர்கள் கருதி, வீட்டிற்குள்  புகுந்திருக்கலாம் என்றும், ஆனால் எதிர்பாராத விதமாக தம்பதியினர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர்கள் எழுந்து  வந்துவிட்டதையும் பார்த்ததால் திருடர்கள் கையில் கிடைத்த நகைப்பெட்டியுடன் தப்பியிருக்கலாம் எனவும் காவல்துறை கருதுகிறது. தடயவியல் நிபுணர்கள், திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைப் பதிவு செய்தனர். கிடைத்த தடயங்களின் அடிப்படையில் இந்த  சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த வீட்டுக்கு எதிரில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் அருகில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் அந்த வீட்டுக்குள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.