ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் அவ்வப்போது சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 6,419 நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 244 லாட்டரி வழக்குகளில் 311 நபர்களும், 196 கஞ்சா வழக்குகளில் 282 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.25 லட்சத்து 71 ஆயிரத்து912 மதிப்புள்ள 187 கிலோ, ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 891 மதிப்புள்ள 3, 992 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 500 மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா சாக்லெட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிர தொடர் நடவடிக்கையாக 50 கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கையாண்டதாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 525 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 11 ஆயிரத்து 611 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு சம்பந்தப்பட்ட 10 நபர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 164 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 830 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ. 69 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.