Skip to main content

காதலைப் பிரித்ததால் ஆத்திரம்; காதலியின் அண்ணனைக் கொன்ற காதலன் உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள்!

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

2 people, including the boyfriend who incident his girlfriend's brother, were sentenced to life imprisonment

 

ஜலகண்டாபுரம் அருகே காதலைப் பிரித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளியுடன் சேர்ந்து காதலியின் அண்ணனை சரமாரியாக  வெட்டிக் கொன்ற வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.     

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள அரியாம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவருடைய மகள் திவ்யா (18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாதையன் மகன் பாஸ்கர் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதையறிந்த திவ்யாவின் அண்ணன் அருண்குமார் (27), ஊர் பெரியவர்களுடன் பேசி காதலர்களைப் பிரித்து வைத்தார்.     

 

இதையடுத்து, காதலியைப் பிரித்து வைத்த அருண்குமாரை எப்படியாவது பழிவாங்கியே தீர வேண்டும் என்று பாஸ்கர் திட்டமிட்டார். கடந்த 2020ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி, நாமக்கல்லில் இருந்து அருண்குமார் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகைக்காக சென்றுள்ளார். அங்கே தனது மோட்டார் சைக்களில் சித்தப்பா வீட்டுக்குச் சென்றுள்ளார். இதைப் பார்த்த பாஸ்கர், சம்மட்டியூரைச் சேர்ந்த தனது கூட்டாளி ஹேமநாத் என்பவரை அழைத்துக் கொண்டு ஊருக்குள் வந்த அருண்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் நிகழ்விடத்திலேயே பலியானார்.  

 

இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர், ஹேமநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் குழந்தைவேலு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி சரவணன், மார்ச் 15ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் கூடுதலாக 3  ஆண்டுகள், 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.